சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் தவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் ( தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள்- வழிபாடுகள் நடைபெறும்.
அதே போல் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி, தீபாராதனை காட்டுவார்.
18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல், அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள்நடைபெறும். இந்த பூஜைகள் 22-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெற்று, 22-ந்தேதி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.