சந்திர கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
சூரியன் மற்றும் பூமிக்கு இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் கடக்கும்போது, அது சூரிய ஒளியை பூமிக்கு வராமல் மறைக்கும். அதைச் சூரிய கிரகணம் என்றும், சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே ஒரே நேர்கோட்டில் பூமி கடக்கும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதை சந்திர கிரகணம் என்றும் சொல்வார்கள்.
அந்த வகையில் 2022ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நவம்பர் 8ஆம் திகதி நாளை நடைபெற உள்ளது. அன்றைய தினம் நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
என்ன செய்யலாம்?
கிரகணத்திற்கு முன்னதாகவே செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பைப்புல் அல்லது அருகம்புல்லினை போட்டு வைக்க வேண்டும்.
சந்திர கிரகண நேரத்தில் யாகசாலை அமைத்து ஹோமங்கள் செய்வது சக்தி வாய்ந்த பலத்தையும், நூறு மடங்கு புண்ணியங்களையும் தரும்.
சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.
கிரகணத்தின்போது சந்திர கிரகணத்துக்கான துதியையும், நவகிரக துதியையும் பாராயணம் செய்யலாம்.
சந்திர கிரகண நேரத்தில் ஜெபம் மற்றும் தியானம் செய்யலாம். மேலும் தெரிந்த ஸ்லோகங்களை சொல்லி கொண்டிருக்கலாம்.
சந்திர கிரகண காலத்தில் விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் மற்றும் சிவ புராணம் சொல்வது, கேட்பது நன்மை தரும்.
என்ன செய்யக்கூடாது?
கிரகண நேரத்தில் சமையல் செய்யக்கூடாது, முக்கியமாக சாப்பிடக்கூடாது, நகம் கிள்ளக்கூடாது, எந்த வேலையும் செய்யக்கூடாது.
கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.
கிரகண காலத்தில் உடலில் எண்ணெய் தேய்ப்பது போன்ற செயல்களை செய்யக்கூடாது.
கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். ஒரு பெண் இந்த சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும்.
கிரகண நேரத்தில் கூர்மையான பொருட்களை உபயோகிக்கக்கூடாது. முக்கியமாக கத்தரிக்கோல் கொண்டு துணிகளை வெட்டக்கூடாது.
கர்ப்பிணிகள் ஏன் வெளியே போகக்கூடாது?
சந்திர கிரகணத்தின்போது கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. கர்ப்பிணி பெண்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
ஏன் வெளியே போகக்கூடாது? என்றால் கிரகணம் நிகழும்பொழுது மற்றவர்களை விட கர்ப்பிணி பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது.
அப்படியே வெளியே வந்து வெளி வெளிச்சம் பட்டால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் தாக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. இதனால்தான் கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் வெளியே போகக்கூடாது என்று கூறுகிறார்கள்.