ஆட்டிப்படைக்கும் ஜென்ம சனி! எந்த ராசிக்கு? என்ன செய்யும்?
ராசிக்கு 1ல் சனி இருந்தால் ஜென்ம சனி.
உயிர்கள் பிறந்த ஜென்ம ராசியில் தான் சனி தேவர் சஞ்சாரம் செய்வார்.
இந்த காலத்தில் பல்வேறு இழப்புகள் அல்லது அதற்கு சமமான வேதனைகளை தரக்கூடியவர்.
நடைபெற இருக்கும் சனிப்பெயர்ச்சியில் சனிபகவான் கும்ப ராசியான தனது ஆட்சி வீட்டில் நின்று, தான் நின்ற நிலைக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை இனி வருகின்ற இரண்டரை வருடங்கள் அளிக்க உள்ளார்.
ஜென்ம சனி நன்மையா? தீமையா?
சமுதாயத்தில் மதிக்கப்பட்ட நிலையில் இருப்பவர்கள் கூட ஜென்ம சனி காலத்தில் தேவையில்லாத விமர்சனத்தால் மனத்துயரம் அடைவார்கள்.
தன் சகோதரர்களோடு தேவையில்லாமல் பகைமையை வளர்த்துக் கொள்வதுடன் அவரை பகையாளிகளாக எண்ணுவார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேல் அதிகாரிகளிடம் சாதகமான சூழல் அல்லாமல் பாதகமான சூழல் ஏற்பட்டு தன்மான இழப்பு போன்றவைகளை ஏற்படுத்துவார்.
செய்தொழில் புரிவோருக்கு உற்பத்திக்கான விற்பனை இல்லாமல் தொழிலில் தேக்க நிலை உண்டாகும். தொழில் பயணங்களால் லாபம் இருக்காது.
ஆடை, அணிகலன்களால் தன விரயம் அல்லது வீட்டில் திருட்டு போதல் போன்றவை நிகழும். அதனால் சில விபரீத சிந்தனைகளை ஏற்படுத்துவார்.
கணவன், மனைவிக்கு இடையே உறவில் விரிசல் மற்றும் பிள்ளைகளை விட்டு பிரிதல் போன்ற குடும்ப பிரச்சனைகளால் நிம்மதியின்மையான சூழல் அமையும்.
கூட்டுத்தொழிலில் சக பங்குதாரர்களிடம் வாக்குவாதத்தினால் பங்குதாரர்களுக்கு இடையே பிரிவினையும், மனக்கசப்பு மற்றும் வருத்தம் ஏற்படக்கூடிய நிகழ்வுகளை நிகழ்த்துவார்.
சரியான வேலை அமையாமலும், வேலையில்லா நிலையும் ஏற்படுத்தி எண்ணங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவார். எதிலும் சுறுசுறுப்பு இன்றி மந்தநிலையை ஏற்படுத்துவார்.
தீயோர்களின் நட்புகள் எளிதில் அமையப்பெற்று நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவார். தீய பழக்கங்களால் உடல் பலவீனத்தை ஏற்படுத்தி சோம்பேறி என்ற பெயருக்கு உரியவராக மாற்றுவார்.
நெருக்கமான உறவினர்களை இழத்தல் அல்லது அவர்களால் ஏமாற்றப்பட்டு அவர்களிடமிருந்து பிரிந்து வாழக்கூடிய வேதனையான நிலையை அளித்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யார் என்பதையும் உங்களின் நிலை அவர்களிடம் என்ன என்று உங்களுக்கு புரியும் வகையில் புரிய வைக்கக்கூடியவர்.
காரியத்தடை, கீர்த்தி பங்கம் போன்ற பல சோதனைகளை ஏற்படுத்தி நம் வாழ்க்கை என்னவென்று புரிய வைக்கக்கூடிய நீதிமான்.
பரிகாரம் :
செவ்வாய்க்கிழமைதோறும் விநாயகரை வழிபடவும்.
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபடவும்.
உடல் ஊனமுற்றோர்களுக்கு பொருள் உதவி செய்வதன் மூலம் சனியின் பாதிப்பு குறையும்.
நவகிரகத்தில் இருக்கும் சனிக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய இன்னல்கள் குறையும்.